நற்றிணைக் காட்சி: 316
தீட்டியவர்: இடைக்காடனார்
இந்தக் காட்சியிலே ஒரு அழகிய பெண்ணும் அவள் தோழியும் அமர்ந்திருக்கிறார்கள். அழகிய பெண்ணின் காதலன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். போகு முன் அங்கேயிருந்த ஒரு முல்லைக் கொடியைக் காட்டி “கண்ணே, இந்த முல்லை மலர்கள் அரும்பும்போது வந்து விடுவேன். கவலைப் படாதே” என்று தேற்றிச் சென்றான். கார்காலம் வந்தால் முல்லை பூக்கும். அதனால் கார்காலத்திற்கு முன் வந்து விடுவேன் என்று உறுதி கூறிப்போனவன் இன்னும் வரவில்லை. இந்தப் பைத்தியக்காரியோ அந்தச் முல்லைச்செடி அரும்புகிறதா, தலைவன் வருவதற்குக் காலமாகிவிட்டதா என்று வழி பார்த்துப் பார்த்து ஏங்கிக் கிடக்கிறாள்.
திடீரென்று கார்காலத்திற்கு அறிகுறியாக, மழை வந்தது. தலைவன் சொன்ன மாதிரியே முல்லைச் செடிகளும், இன்னும் பல்வேறு செடிகளும் அரும்பு விடத் தொடங்கிவிட்டன. இவற்றைக் கண்ட தலைவியின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அனலிடை இட்ட புழுவாகத் துடித்தாள். தன் காதலனின் வரவை எதிர்நோக்கி ‘அவன் இன்னும் வரவில்லையே’யென்று பரிவால் மெலிந்து வருந்துகிறாள். அவன் சொன்ன வார்த்தைகள் பொய்யாயினவோவென்று நடுங்கினாள்.
இதைக் கண்ட அவளது உற்ற தோழி “அம்ம, மழை பொழிகிறதேயென்று கவலைப்படாதே. இது தலைவனின் குற்றமல்ல. மலர்களின் தவறுமல்ல. இந்த முட்டாள் மேகத்தின் தவறு” என்று தலைவியைத் தேற்றுகிறாள்.
அதை எப்படிச் சொல்கிறாள்? இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாம் இடைக்காடனார் என்ற பெரும் புலவரைக் கேட்க வேண்டும். இவர் இடைக்காடு என்னும் மலையாள நாட்டைச் சேர்ந்த பெரும் புலவராக இருக்கலாமென்று சொல்வார்கள்.. அதனால் அவர் பெயர் இடைக்காடனார். இவரது பாடல்கள் நற்றிணை, மற்றும் குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடனார் இந்தக் காட்சியிலே என்ன சொல்கிறார்? அவர் கொடுத்த நற்றிணைப் பாடல் இதோ:
மடவது அம்ம, மணிநிற எழிலி!
“மலரின் மெளவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்” என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர், தம்நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே
தோழி சொல்கிறாள்.
மடவது அம்ம மணிநிற எழிலி: எழிலியென்றால் மேகம். மணிநிற எழிலியென்றால் நீலமணி போன்ற நிறமுடைய கார்கொண்ட மேகம் என்று பொருள். மணி வண்ணன் என்று நீலநிறக் கண்ணனைச் சொல்லுகிறோமல்லவா. “அம்மா, இந்த மிகவும் அழகான மேகம்தான். ஆனாலும் ஏதோ தெரியாமல் இப்படி ஒரு பெரிய தவறு செய்து விட்டது. கவலைப்படாதே” என்று தேற்றினாள். முதல் வரியிலேயே சுருக்கமாகத் தன் கருத்தை சொல்லிவிட்டாள். பிறகு சொல்கிறாள்.
“வெளியூர் போகுமுன் உன் காதலர் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா.”
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி:
“அதோ அந்த முல்லைப் புதரை குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்”. மௌவல் என்றால் முல்லை. அவர் விடை பெறும் பருவத்தில் அந்த முல்லைச் செடி இன்னும் பூத்திருக்க வில்லை. இன்னும் பூக்காத முல்லையாதலால்,
மலர் இன் மௌவல், மலரில்லாத முல்லைச்செடி அல்லது முல்லைப் புதர். “அந்தச் செடியைக் காட்டி உனது காதலன் சொன்ன வார்த்தைகளென்ன? நினைவிருக்கிறதா?”
அம்ம, கயல் ஏர் உண் கண் கனங்குழை! மீனைப் போன்ற மையுண்ட கண்களையும், (காதிலே) கனவிய அதாவது கனமான பெருத்த குழையையும் அணிந்தவளே!
இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்
“இந்த முல்லை உன் பற்கள் போல அழகிய அரும்புகளை யீனும்பொழுது நான் உன்னை வந்தடைவேன்.” முல்லை தலைவியின் பற்கள் போல அரும்புகளையீனும் என்பதால், தலைவியின் பல்வரிசை முல்லை அரும்புகளைக் காட்டிலும் அழகுடையது என்று குறிப்பு. எயிறு என்றால் பல் நிற்கும் தசை, ஆங்கிலத்திலே gums என்று சொல்வார்கள். காதலர் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தார்?
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்த: அகலமான ஆகாயத்திலே எழுந்த மதியோ? எனப் பார்ப்பவர்கள் ஐயுறும் வண்ணம் பொருந்திய
நின் நல் நுதல் நீவிச் சென்றார்: உன் அழகிய நெற்றியைத் காதலுடன் தடவிக்கொடுத்துச் சென்றார். ஆனால் சென்ற இடத்தில் அவர் வேலை இன்னும் முடியவில்லை போலும்.
நம் நசை வாய்த்து வரல்: நம் மேல் உண்மையான விருப்பம் கொண்டு ( உண்மையான காதலுடன்) வரவேண்டியிருந்தும்,
வாரா அளவை: வராமல் அல்லது வரமுடியாமல் அங்கிருக்கும் பொழுது முல்லை பூக்கலாமா? கார்காலம்தான் வரலாகுமா? வரக்கூடாதுதான். ஆனால் இந்தப் பாழும் மேகம் என்ன செய்தது தெரியுமா?
அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து: தலைவர் வரவேண்டிய வழியையுடைய அதோ அந்த மலைமேலே, கல்மிசை, மலைப்பக்கமெல்லாம் நீர்க்கால் இறங்கி
தளி தரு: நீர்த்துளையைத் தருகின்ற
தண் கார் தலைஇ: இந்த, தண்ணிய மேகம் கூடி
வியல் இடத்து: பரந்த வானத்திலே
விளி இசைத்தன்று: பெரிய ஆரவாரத்தைச் செய்தது. இடியிடிப்பதைச் செய்யா நின்றது.
அதாவது, மலைப்பக்கமெல்லாம் மறைந்து போகுமாறு, இடியிடித்து மழை பொழிந்தது. மழை பெய்ததனால் முல்லை பூத்தது. அவ்வளவுதான். இது இந்த மேகத்தின் அறியாமையால் வந்தது. இது உன் காதலர் குறித்த கார்காலமல்ல. “உண்மையில் இது அவர் குறித்த கார்காலமாயின், அவர் நிச்சயம் வந்திருப்பார். அவர் ஒரு நாளும் பொய் கூறமாட்டார். கவலைப்படாதே” என்று தோழி தேற்றுகிறாள்.
இப்படியாக மழைபெய்தாலும் கூட, இது கார்ப் பருவமன்று என்று கூறும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. குறுந்தொகையில் ஒரு பெண் சொல்வாள், “ வானமோ இது கார்ப் பருவமென்று காட்டுகிறது. ஆனாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஏனெனில் என் காதலர் ஒருநாளும் பொய்யுரைக்க மாட்டார். வாக்குத் தவற மாட்டார். அதனால் அவர் குறித்த கார் காலம் இதுவல்ல” என்று தீர்மானமாகச் சொன்னாள்.
இப்படித்தான் இன்னுமொரு பெண் “ இந்தக் கானகம் பல மலர்களைப் பிளந்து காட்டி இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது என்று கூறினாலும், அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில், என் தலைவர் ஒருக்காலும் பொய்யுரைக்க மாட்டார்” என்று சொன்னதாக, ஓதலாந்தையார் எனும் புலவர் பாடிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது. “கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே “(குறுந்தொகை 21)
இக்காலக் காதலில் இந்த நம்பிக்கையிருக்கிறதா?
இப்பொழுது மறுபடியும் இந்தப் பாடலைப் படியுங்கள். சுவையுங்கள்.
மடவது அம்ம மணிநிற எழிலி
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி
கயலேர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறேர் பொழுதின் ஏய்தருவேமென
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்தநின்
நன்னுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாராவளவை அத்தக்
கல்மிசையடுக்கம் புதையக் கால் வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியலிடத்தானே .
நற்றிணை பாடல் எண்: 316
திணை: முல்லை
பாடியவர்: இடைக்காடனார்