Monthly Archives: December 2016

மடவது அம்ம! மணி நிற எழிலி!

நற்றிணைக் காட்சி: 316
தீட்டியவர்: இடைக்காடனார்

இந்தக் காட்சியிலே ஒரு அழகிய பெண்ணும் அவள் தோழியும் அமர்ந்திருக்கிறார்கள். அழகிய பெண்ணின் காதலன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். போகு முன் அங்கேயிருந்த ஒரு முல்லைக் கொடியைக் காட்டி “கண்ணே, இந்த முல்லை மலர்கள் அரும்பும்போது வந்து விடுவேன். கவலைப் படாதே” என்று தேற்றிச் சென்றான். கார்காலம் வந்தால் முல்லை பூக்கும். அதனால் கார்காலத்திற்கு முன் வந்து விடுவேன் என்று உறுதி கூறிப்போனவன் இன்னும் வரவில்லை. இந்தப் பைத்தியக்காரியோ அந்தச் முல்லைச்செடி அரும்புகிறதா, தலைவன் வருவதற்குக் காலமாகிவிட்டதா என்று வழி பார்த்துப் பார்த்து ஏங்கிக் கிடக்கிறாள்.

திடீரென்று கார்காலத்திற்கு அறிகுறியாக, மழை வந்தது. தலைவன் சொன்ன மாதிரியே முல்லைச் செடிகளும், இன்னும் பல்வேறு செடிகளும் அரும்பு விடத் தொடங்கிவிட்டன. இவற்றைக் கண்ட தலைவியின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அனலிடை இட்ட புழுவாகத் துடித்தாள். தன் காதலனின் வரவை எதிர்நோக்கி ‘அவன் இன்னும் வரவில்லையே’யென்று பரிவால் மெலிந்து வருந்துகிறாள். அவன் சொன்ன வார்த்தைகள் பொய்யாயினவோவென்று நடுங்கினாள்.
இதைக் கண்ட அவளது உற்ற தோழி “அம்ம, மழை பொழிகிறதேயென்று கவலைப்படாதே. இது தலைவனின் குற்றமல்ல. மலர்களின் தவறுமல்ல. இந்த முட்டாள் மேகத்தின் தவறு” என்று தலைவியைத் தேற்றுகிறாள்.

அதை எப்படிச் சொல்கிறாள்? இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாம் இடைக்காடனார் என்ற பெரும் புலவரைக் கேட்க வேண்டும். இவர் இடைக்காடு என்னும் மலையாள நாட்டைச் சேர்ந்த பெரும் புலவராக இருக்கலாமென்று சொல்வார்கள்.. அதனால் அவர் பெயர் இடைக்காடனார். இவரது பாடல்கள் நற்றிணை, மற்றும் குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடனார் இந்தக் காட்சியிலே என்ன சொல்கிறார்? அவர் கொடுத்த நற்றிணைப் பாடல் இதோ:
மடவது அம்ம, மணிநிற எழிலி!
“மலரின் மெளவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்” என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர், தம்நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே
தோழி சொல்கிறாள்.
மடவது அம்ம மணிநிற எழிலி: எழிலியென்றால் மேகம். மணிநிற எழிலியென்றால் நீலமணி போன்ற நிறமுடைய கார்கொண்ட மேகம் என்று பொருள். மணி வண்ணன் என்று நீலநிறக் கண்ணனைச் சொல்லுகிறோமல்லவா. “அம்மா, இந்த மிகவும் அழகான மேகம்தான். ஆனாலும் ஏதோ தெரியாமல் இப்படி ஒரு பெரிய தவறு செய்து விட்டது. கவலைப்படாதே” என்று தேற்றினாள். முதல் வரியிலேயே சுருக்கமாகத் தன் கருத்தை சொல்லிவிட்டாள். பிறகு சொல்கிறாள்.
“வெளியூர் போகுமுன் உன் காதலர் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா.”
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி:
“அதோ அந்த முல்லைப் புதரை குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்”. மௌவல் என்றால் முல்லை. அவர் விடை பெறும் பருவத்தில் அந்த முல்லைச் செடி இன்னும் பூத்திருக்க வில்லை. இன்னும் பூக்காத முல்லையாதலால்,
மலர் இன் மௌவல், மலரில்லாத முல்லைச்செடி அல்லது முல்லைப் புதர். “அந்தச் செடியைக் காட்டி உனது காதலன் சொன்ன வார்த்தைகளென்ன? நினைவிருக்கிறதா?”
அம்ம, கயல் ஏர் உண் கண் கனங்குழை! மீனைப் போன்ற மையுண்ட கண்களையும், (காதிலே) கனவிய அதாவது கனமான பெருத்த குழையையும் அணிந்தவளே!
இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்
“இந்த முல்லை உன் பற்கள் போல அழகிய அரும்புகளை யீனும்பொழுது நான் உன்னை வந்தடைவேன்.” முல்லை தலைவியின் பற்கள் போல அரும்புகளையீனும் என்பதால், தலைவியின் பல்வரிசை முல்லை அரும்புகளைக் காட்டிலும் அழகுடையது என்று குறிப்பு. எயிறு என்றால் பல் நிற்கும் தசை, ஆங்கிலத்திலே gums என்று சொல்வார்கள். காதலர் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தார்?
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்த: அகலமான ஆகாயத்திலே எழுந்த மதியோ? எனப் பார்ப்பவர்கள் ஐயுறும் வண்ணம் பொருந்திய
நின் நல் நுதல் நீவிச் சென்றார்: உன் அழகிய நெற்றியைத் காதலுடன் தடவிக்கொடுத்துச் சென்றார். ஆனால் சென்ற இடத்தில் அவர் வேலை இன்னும் முடியவில்லை போலும்.
நம் நசை வாய்த்து வரல்: நம் மேல் உண்மையான விருப்பம் கொண்டு ( உண்மையான காதலுடன்) வரவேண்டியிருந்தும்,
வாரா அளவை: வராமல் அல்லது வரமுடியாமல் அங்கிருக்கும் பொழுது முல்லை பூக்கலாமா? கார்காலம்தான் வரலாகுமா? வரக்கூடாதுதான். ஆனால் இந்தப் பாழும் மேகம் என்ன செய்தது தெரியுமா?
அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து: தலைவர் வரவேண்டிய வழியையுடைய அதோ அந்த மலைமேலே, கல்மிசை, மலைப்பக்கமெல்லாம் நீர்க்கால் இறங்கி
தளி தரு: நீர்த்துளையைத் தருகின்ற
தண் கார் தலைஇ: இந்த, தண்ணிய மேகம் கூடி
வியல் இடத்து: பரந்த வானத்திலே
விளி இசைத்தன்று: பெரிய ஆரவாரத்தைச் செய்தது. இடியிடிப்பதைச் செய்யா நின்றது.

அதாவது, மலைப்பக்கமெல்லாம் மறைந்து போகுமாறு, இடியிடித்து மழை பொழிந்தது. மழை பெய்ததனால் முல்லை பூத்தது. அவ்வளவுதான். இது இந்த மேகத்தின் அறியாமையால் வந்தது. இது உன் காதலர் குறித்த கார்காலமல்ல. “உண்மையில் இது அவர் குறித்த கார்காலமாயின், அவர் நிச்சயம் வந்திருப்பார். அவர் ஒரு நாளும் பொய் கூறமாட்டார். கவலைப்படாதே” என்று தோழி தேற்றுகிறாள்.
இப்படியாக மழைபெய்தாலும் கூட, இது கார்ப் பருவமன்று என்று கூறும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. குறுந்தொகையில் ஒரு பெண் சொல்வாள், “ வானமோ இது கார்ப் பருவமென்று காட்டுகிறது. ஆனாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஏனெனில் என் காதலர் ஒருநாளும் பொய்யுரைக்க மாட்டார். வாக்குத் தவற மாட்டார். அதனால் அவர் குறித்த கார் காலம் இதுவல்ல” என்று தீர்மானமாகச் சொன்னாள்.
இப்படித்தான் இன்னுமொரு பெண் “ இந்தக் கானகம் பல மலர்களைப் பிளந்து காட்டி இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது என்று கூறினாலும், அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில், என் தலைவர் ஒருக்காலும் பொய்யுரைக்க மாட்டார்” என்று சொன்னதாக, ஓதலாந்தையார் எனும் புலவர் பாடிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது. “கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே “(குறுந்தொகை 21)
இக்காலக் காதலில் இந்த நம்பிக்கையிருக்கிறதா?

இப்பொழுது மறுபடியும் இந்தப் பாடலைப் படியுங்கள். சுவையுங்கள்.
மடவது அம்ம மணிநிற எழிலி
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி
கயலேர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறேர் பொழுதின் ஏய்தருவேமென
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்தநின்
நன்னுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாராவளவை அத்தக்
கல்மிசையடுக்கம் புதையக் கால் வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியலிடத்தானே .
நற்றிணை பாடல் எண்: 316
திணை: முல்லை
பாடியவர்: இடைக்காடனார்

மேகமே! நினை மருள்வேனோ!

நற்றிணைக் காட்சி: 248
தீட்டியவர்: காசிபன் கீரன்

முன்பு இளந்திரையனார் தீட்டிய ஒரு அழகிய காட்சியைக் கண்டோம் அதிலே பருவந்தவறிய, வம்பு மாரியைப் பெய்த இந்த மணிநிற எழிலி மேகம் மடவது, அறியாமையால் செய்தது என்று, தோழி தலைவியைத் தேற்றினாள்.
இந்தக் காட்சியை மனக் கண்ணில் நான் ரசித்திருக்கும் வேளையில் இன்னொருவர் வந்து என் தோளைத் தட்டினார். “யாருங்க? அருமையான காட்சியைக் கலைத்து விட்டீங்களே” என்றேன். அதற்கு அவர் சொன்னார், “தம்பி நடராசனாரே, என் பெயர் காசிபன் கீரன், கீரனென்றால் நக்கீரரல்ல. அவர் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை வகித்தவர். அக்காலத்தில் கீரன் என்ற பெயரில் பல புலவர்களிருந்தமையால் அவர்களது பெயரை ஏதாவது அடை மொழியோடு சேர்த்துச் சொல்வார்கள். நான் காசிப கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணன். அதனால் எனக்குக் காசிபன் கீரனார் என்ற பெயர் அமைந்தது.”
“அப்படியா.. ஐயா! நீங்கள்தானே வம்பமாரியைப் பற்றி மிகுந்த நயத்துடன் அமைந்த பாடலைத் தந்தவர்?”
“ஆம் தம்பி வாருங்கள்…. பாருங்கள் இந்தக் காட்சியை”, என்று ஒரு பாடலைத் தந்துவிட்டு மறைந்தார். இவர் தீட்டிய காட்சியும், முன்புகண்ட “மடவ அம்ம” வகைதான்.
இங்கும் தலைவி முல்லைப் புதர்களின் அருகே வருத்தமுடன் தலைவன் வரவை நோக்கி அமர்ந்திருக்கிறாள். மழை வரப்போவதற்கு அறிகுறியாகப் பெருத்த இடியோசை அச்சம் தரும் வகையில் ஒலிக்கிறது. அருகேயமர்ந்துள்ள அவளது தோழி யாரையோ சாடிக் கொண்டிருக்கிறாள். அருகில் சென்று நன்றாகப் பார்த்தால் இங்கேயும் ஒரு மழை மேகம்தான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. பாவம். “மேகமே, உனக்கு எங்களைக் கண்டால் ஆகவில்லை. அதனால் வேண்டுமென்றே தவறான காலத்தில் பெரிதாக மழைபொழிந்து, பெருத்த இடியோசையால் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறாய். அதற்கு வேறு ஆளைப் பார்.” என்று மேகத்தைப் பழிக்கு முகமாகத் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். முதலில் பாடலைப் பார்ப்போம்.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறிவரி நல் மான் புகர்முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர் மன்” இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக்கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே.

தோழி சொல்கிறாள். “எங்கள் தலைவர் வேலை நிமித்தமாக எம்மைப் பிரிந்து செல்லும் போது, “நீர் எப்பொழுது வருவீர்” எனக் கேட்டோம்.

அதற்கு அவர் “வண் பெயல் கார் வருபருவம் என்றனர்”. மிக்க மழையுடைய கார்ப்பருவமன்றோ நாம் வரும் பருவம்” என்று கூறிப் பிரியா விடை பெற்றுப் போனார்.

கார்ப்பருவத்திற்கு அடையாளம் என்ன? மழை பெய்யும். முல்லை பூக்கும். சென்ற வாரமும் ‘மலரின் மெளவல்’ ‘முல்லைச் செடி உன் பற்களைப் போல அரும்பும்போது’ என்று தலைவன் தலைவியின் தலையில் பனி மழை பெய்தது நினைவிருக்கும்…. இங்கும் முல்லைதான் கார்காலத்திற்குக் குறிப்புக் காட்டுகிறது.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
சிறிய பூவையுடைய முல்லையின் தேன் மணம் கமழும் பசிய மலரெல்லாம்,
பொறி வரி நன்மான் புகர் முகம் கடுப்ப

நன்மான் என்றால் இங்கே யானையைக் குறிக்கும். யானைக்குப் பல பெயர்கள் உண்டு. யானை, மாதங்கம், கரி, கைமா, வேழம், பகடு, களிறு, நன்மான் ஆகியவை இவற்றுள் சில. நல்ல யானையின் முகத்தில் வெண்புள்ளிகளும், வரிகளும் அமைந்திருக்கும். அப்படியாகத் தோன்றுமாறு முல்லைப் புதரிலே மலர்கள் பூத்திருக்கும். புகர் என்றால் மத்தகப் புள்ளி.
தண்புதல் அணி பெற மலர…. இந்த மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பெறும்படி மலர என்றான் தலைவன். அந்த முல்லை மலர்தற்கு உவமை வேறு காட்டினான்.
சரி, இப்போது என்னவானது? தலைவன் இன்னும் வரவில்லை. சென்ற வேலை முடியவில்லை. அவன் குறித்த கார் காலமும் வரவில்லை. ஆனால், இந்த மேகம் இருக்கிறதே..அது என்ன செய்ததாம்?

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
பேர் அஞர் உள்ளம் என்றால் பெரிய துன்பம் பொருந்திய உள்ளம். தலைவனைப் பிரிந்தமையால வாடி நைந்த உள்ளம். அப்படியான சோர்ந்த உள்ளம் படைத்த தலைவி நடுங்குவதைக் நீ காண விரும்பினை. அதில் உனக்கு ஒரு அல்ப மகிழ்ச்சி. எதனால்?

அன்பு இன்மையின்
உனக்கு தலைவி மேல் அன்பில்லாததனால் அவளை நடுங்கி கலங்க வைக்கப் பார்க்கிறாய். அதனால் என்ன செய்தாய்?

பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர்குரல்
நீ பண்பில்லாத, இயல்பில்லாத காரியத்தைச் செய்தாய்.
பொய்யாக இடி இடித்து பெரிய ஓசை எழுப்பினாய் மழை வருமாற் போல இடி இடித்தாய். சரி இடித்துக் கொள் சத்தம் போடு. எங்களை யென்னவென்று நினைத்தாய்? இந்த பருவந்தவறிய இடியோசையை

“வாய் செத்து ஆலும் இன் மயில் மடக்கணம் போல” வாய் செத்து ஆலும் என்றால் வாய் செத்துப் போச்சுடா என்பார்களே …. அந்த மாதிரிப் பொருளல்ல. வாய் என்றால் வாய்மையென்று பொருள்; செத்து: கருதி; ஆலும்: கூவும் இல்லது அகவும். இடியோசை கேட்டு மயிலினங்கள் அகவும். இங்கே இந்த மடமையான மயிற் கூட்டம் இந்த இடியோசையைக் கேட்டு மழை வருமென தவறாகக் கருதி அகவும், ஆரவாரம் செய்தன. ஆனல் நாங்கள் உண்மை தெரிந்தவர்கள்.

நினை மருள்வேனோ
நாங்கள் பயந்து விடுவோமா? பயந்துவிடுவதென்றால் இடியோசையைக் கேட்டு பயந்து கொள்வதல்ல. தலைவன் கார்காலம் வருமுன்னே வருவேன் என்றாரே. இப்போது இடி இடித்து மழை வரவிருக்கிறதே. அவர் இன்னும் வரவில்லையே. அவருக்கு என்னவானதோ ஏதானதோ வென்று பயந்து கொள்வோமென்று நினைத்தாயானால் அது நடக்காது. ஏனெனில் எங்களுக்கு எம்தலைவர் மீதும் அவரது வாக்கின் மீதும் மிகுந்த நம்பிக்கையிருக்கிறது.

வாழியர் மழையே : மழையே நீ நல்லாயிரு. இது இகழ்ச்சியாகக் கூறப்பட்ட வாழ்த்து இப்படி ஒரு பண்பில்லாத காரியத்தைச் செய்கிறாயே. பொய்யாக இடித்து, மழைபெய்கிறாயே… நீ நல்லாயிரு. நீ உருப்படுவாயா?

உண்மையில் நடந்ததென்னவெனில் பருவந்தவறி இடியோசையுடன் மழை பெய்தது. இடியோசை கேட்டு மயில்கள் ஆரவாரம் செய்தன. தோழி தலைவியிடம் “இது உண்மையில் கார் காலமல்ல, இது பருவந்தவறிய மழை. நின் தலைவர் கார் காலத்தில் வருவார். இந்த மேகம்தான் உன்னிடம் அன்பில்லாமல் வம்பு செய்கிறது” என்று தேற்றுகிறாள். இந்த மிக்க நயமான காட்சியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர் முகம் கடுப்ப
தண்புகலணி பெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர்மன்னினிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பின்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்தாலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள்வேனோ வாழியர் மழையே.

நற்றிணை: 248
காசிபன் கீரனார்
திணை: முல்லை
துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.