Tag Archives: Literature

அடடா! என்ன நல்ல மேகம்!

அடடா! என்ன நல்ல மேகம்!
காட்சி : 112
தீட்டியவர்: பெருங்குன்றூர் கிழார்

தலைவியைச் சமாதானம் செய்வதற்காக மேகத்தைப் பழிக்கும் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க,” என்னடாயிது, இந்த சங்க காலத்துப் பெண்களுக்கு வேறு வேலையே யில்லையா? காதலன் வெளியூர் போனவன் வருவானெனக் காத்து நிற்க வேண்டியது. மழைக் காலம் வந்தால் இன்னும் வரவில்லையேயென்று கவலைப் படவேண்டியது. இதுதான் தலைவியின் வேலை. அவளது தோழிப் பெண்ணுக்கும் அவளைத் தேற்றுவது தவிர வேறு வேலையில்லை போலும். ஏதாவது சமாதானம் சொல்லி தேற்றிக் கொண்டேயிருப்பது.” என்றெல்லாம் தோன்றியது. “இந்த சங்ககாலப் பெண்களிடம் மேகம் படும் பாடு பெரிய பாடுதான். இக்காலத்தில் தமிழ் நாட்டில் எல்லோரும் மழை வரவேண்டுமென்று மாரியை வேண்டி நின்றால், அக்காலத்தில் மாரியை வம்ப மாரியென்று திட்டுவதே வழக்கமாகிப் போனது. இப்படி சங்க காலத்து பெண்கள் மழையைத் திட்டித் திட்டித் தான் கோபம் கொண்ட மேகம் தமிழ் நாட்டில் அவ்வப்போது பிகு பண்ணுகின்றது போலும்” என்று எண்ணியவாறு நற்றிணைக் காலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு காட்சி! ஆ! யாரோ ஒருத்தி மழை மேகத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தாள்!!

இந்தக் காட்சியிலும் அதே மழைக்காலம், பருவம் வந்துவிடுமுன் வருவேன் என்று சொல்லி சென்று விட்டு இன்னும் வராத தலைவன். தோழி சொல்கிறாள்:

விருந்தெவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து, விரும்பி,
மாக்கடல் முகந்து, மணிநிறத்தருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப்பாய்
மலையிமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

இந்தப் பெண்கள் இருக்குமிடம் மலைப்பகுதி. மரங்களும் நீர் வீழ்சிகளும் அடர்ந்த இடம். அது எப்படியான மலைப் பக்கம் தெரியுமா?
சுரும்பு இமிர் அடுக்கம். சுரும்பு என்றால் வண்டினம். வண்டினம் முரலும் மலைப்பகுதி. வண்டுகள் மலரிருக்கும் இடம் தேடிவருமல்லவா? இங்கேயும்,
சாரல் அரும்பு அறமலர்ந்த
கருங்கால் வேங்கை சுரும்பு இமிர் அடுக்கம்…
மலைச்சாரல் முழுதும் அரும்புகள் மலர்ந்த, கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், வண்டினம் முரலும் மலைப்பக்கம். அப்படிப்பட்ட மலைப்பக்கத்தின் பெருமை என்ன?
அடுக்கம் புலம்ப, அந்த மலைப்பகுதியே அஞ்சும்படியாகக் களிறு அட்டு; களிறு என்றால் யானை. யானைக்குக் களிறு, பிடி, வேழம், கரிமா, கோட்டுமா, நன்மான், பகடு, மாதங்கம் என்றெல்லாம் பல பெயர்களுள்ளன. இங்கே களிறு என்பதை காட்டு யானையென்றும் கொள்ளலாம். அப்படியான களிற்றைக் கொன்று, அட்டு,
உரும்பில் உள்ளத்து அரிமா விளங்கும்: உரும்பில், என்பதை உருப்பு இல் என்று கொள்ள வேண்டும். உருப்பு என்றால் அச்சம். தமிழ் பாடல்களில் எதுகை, மோனை இவை மிகவும் இன்றியமையாததல்லவா? அதனால் உருப்பு என்பது உரும்பு என்று திரிந்தது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் முந்தைய வரி ‘சுரும்பு இமிர்’ என்று ஆரம்பிக்கிறது. சுரும்பும், உரும்பும் எதுகையாக அமைந்தது என்பார்கள். சரி, இங்கே களிற்றைக் கொன்று, அச்சமில்லாத உள்ளத்தோடு … என்பதிலிருந்து இந்தப் போராட்டம் அந்த மலைப்பகுதியையே நடுங்க வைக்கிறதாம். அப்படிப்பட்ட வீரமான நிகழ்ச்சிகள் நடக்கும் மலைக்கு உரியவன் நம் தலைவன்.
பெருங்கல் நாடன்… நாட்டுக் குடையவன் நாடன். பட்டிக்காட்டிலிருந்து வந்தவனை காடன் என்று சொல்லப் போய், அது காட்டானாக மாறி வழங்குவது நமக்குத் தெரியும். வீரமான சிங்கத்தைப் பற்றி சொன்னதால் இவனும் அதுபோல் பெரும் போர்வீரனாக விளங்குகிறான் என்றும் குறிப்பதாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.
சரி, தலைவனைப் பற்றி சொல்லியாயிற்று, இந்த மழை மேகம் என்ன செய்கிறது? இது ரொம்ப நல்ல மேகம். நற்றிணையில் வந்த மற்ற மேகங்களைப் போலல்ல. “சான்றோர் புரைவது அன்று” என்று திட்டு வாங்கிய மேகமல்ல. பிறர் நோயையும் தன்னோய் போலப் போற்றி அறனறியும் மேகம். இது இந்தத் தலைவனின் வரவை எப்படியோ அறிந்து கொண்டு விட்டதாம். அதாவது, மேகம் உயரத்திலிருந்து பார்த்து விட்டது போலும். உடனே, மகிழ்ச்சியினால், “தலைவன் வருவேன் என்றபடி வாக்குத் தவறாமல் வருகிறான்” என்று மகிழ்ந்தது. நாமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தால் தலைகால் தெரியாமல் ஆடுவோமில்லையா? இந்த மேகம் மகிழ்ந்தால் என்னதான் செய்யும்?
மாக்கடல் முகந்து.. ஓடிப்போய் பெரிய கடலிலுள்ள நீரை உண்டு,
செறிந்தது: இங்கே வந்து மழையாகப் பெய்து தள்ளிவிட்டது. எப்படியென்றால்,
மணிநிறத்து அருவித் தாழ் நீர் நனந்தலை அமுந்து படப்பாய். மணிபோலும் வெண்மையான நிறம் கொண்ட அருவி தாழ்நீர்.. அருவி விழுகின்ற இடமெல்லாம் மளைபடுமாறு, அப்படியே அருவியையே மொத்தமாக மறைத்து, அமுந்து.. மழை அருவி நீரில் அமுந்துமாறு.. அவ்வளவு வேகமாகப் பெய்கிறது.. இன்னும்,
மலை இமைப்பது போல் மின்னி… மின்னலாக மின்னுகிறது. அதைப் பார்க்கையில் அந்த மலையே கண்ணை இமைப்பது போல இருக்கிறதாம்.
சிலை வல் ஏற்றொரு செரிந்த,
சிலையென்றால் ஒலி. ஏறு என்பது இடியைக் குறிக்கும். இப்படியாகத் தலைவர் வரும் சேதியை மிகவும் ஆரவாரமாகத் தெரிவிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால் ஜோவென்று கொட்டித் தள்ளி விட்டது!
மழை பொழிந்தது நமக்குத் தலைவனின் வருகையை அறிவிக்க வேண்டியிருக்கலாம். பெரும் மழையாகப் பெய்தமை, தன் அளவிலா மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக்வும் இருக்கலாம். அல்லது, அப்பாடா இனி நம்மை இந்தப் பெண்கள் திட்ட மாட்டார்கள் என்ற மகிழ்ச்சியாலுமிருக்கலாம்!!!
இம்மழைக்கே விருந்து எவன் செய்கோ தோழி! தோழி இப்படித் தலைவன் வரவை முன்பே நமக்கு அறிவிக்கின்ற இம்மழைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று தோழி சொல்கிறாள்:
விருந்து எவன் செய்கோ என்றால் எவன் விருந்து போடுவான் என்பதல்ல. விருந்து என்பது இங்கே முகமன், கைம்மாறு, நன்றியெனப் பொருள்படும். எவன் செய்கோ.. என்ன செய்யக் கூடும்! வள்ளுவர் சொன்னார்
‘தினைத்துனை நன்றி செய்யினும் பனைத்துணையாகக் கொள்வர் பயந்தெரிவார். ‘
இந்தப் பெண் அப்படிப் பயன் தெரிந்த பெண் போலிருக்கிறது.

இப்படி இந்த பெண் மேகத்தைப் பாராட்டுவது போல் தலைவியைத் தேற்றுகிறாள். “இதோ மழை வந்துவிட்டது. உன் தலைவன் வருவதை அறிந்து உனக்குச் சொல்லும் முகமாகவே இந்தமழை வந்திருக்கிறது. அதனால் கவலையுறாதே.. விரைவில் வந்து விடுவான்” என்று குறிப்பால் தேற்றுகிறாள். “பகுத்தறிவில்லாத மேகம் கூட உன் தலைவன் வருவதை அறிந்து மகிழ்கிறது. ஆறறிஉடைய நீதான் வரவில்லை என்று வருத்தப்படுகிறாய்” என்று சொல்வதாகவும் உரைப்பார்கள்.

அப்பாடா, கடைசியாக மேகத்தின் உள்ளம் குளிர்ந்திருக்கும்!!!! ! மழைக்காலக் காட்சியை எப்படியெல்லாம் விளக்குகிறார்கள்? பார்த்தீர்களா? முன்பு, ‘மடவது அம்ம மணிநிற எழிலி’ என்ற பாடலில் ஒருத்தி “ இந்த மேகம் பருவம் தவறி, அவசரமாக கடல் நீரையுண்டு, பொறுக்காமல், மலைப்பக்கத்தில் நின்று, மழையாகப் பெய்து விட்டது! இது அறியாத மேகம், உன் தலைவன் வரவில்லை எனக் கவலைப்படாதே” என்று சொன்னாள். (இளந்திரையனார் இதை எழுதி வைத்தார்). இங்கேயோ, மற்றொருத்தி, “இந்த நல்ல மேகம் உன் தலைவன் வரவை அறிந்து மகிழ்வோடு, கடல் நீரைக் குடித்து, மின்னி இடியுடன் பெய்து உனக்கு செய்தி சொல்லி விட்டது.“என்று சொல்கிறாள். இப்பாடல்களை மீண்டும் மீண்டும் ஒப்பு நோக்கி மகிழுங்கள்.

இப்போது இந்தப் பாடலை மறுபடி படியுங்கள்:

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந்தலை அழுந்து படப் பாய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

நற்றிணை: 112
பாடியவர்: பெருங் குன்றூர்க்கிழார்
திணை: குறிஞ்சி
துறை: பருவ வரவின் கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

அருஞ்சொற்பொருள்.இமிர் – ஒலிக்கும். அடுக்கம் – மலைப் பக்கம். உருப்பு – அச்சம். அரிமா – சிங்கம். நனந்தலை – அகன்ற இடம். ஏறு – இடி. விருந்து – கைம்மாறு

மேகமே! நினை மருள்வேனோ!

நற்றிணைக் காட்சி: 248
தீட்டியவர்: காசிபன் கீரன்

முன்பு இளந்திரையனார் தீட்டிய ஒரு அழகிய காட்சியைக் கண்டோம் அதிலே பருவந்தவறிய, வம்பு மாரியைப் பெய்த இந்த மணிநிற எழிலி மேகம் மடவது, அறியாமையால் செய்தது என்று, தோழி தலைவியைத் தேற்றினாள்.
இந்தக் காட்சியை மனக் கண்ணில் நான் ரசித்திருக்கும் வேளையில் இன்னொருவர் வந்து என் தோளைத் தட்டினார். “யாருங்க? அருமையான காட்சியைக் கலைத்து விட்டீங்களே” என்றேன். அதற்கு அவர் சொன்னார், “தம்பி நடராசனாரே, என் பெயர் காசிபன் கீரன், கீரனென்றால் நக்கீரரல்ல. அவர் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை வகித்தவர். அக்காலத்தில் கீரன் என்ற பெயரில் பல புலவர்களிருந்தமையால் அவர்களது பெயரை ஏதாவது அடை மொழியோடு சேர்த்துச் சொல்வார்கள். நான் காசிப கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணன். அதனால் எனக்குக் காசிபன் கீரனார் என்ற பெயர் அமைந்தது.”
“அப்படியா.. ஐயா! நீங்கள்தானே வம்பமாரியைப் பற்றி மிகுந்த நயத்துடன் அமைந்த பாடலைத் தந்தவர்?”
“ஆம் தம்பி வாருங்கள்…. பாருங்கள் இந்தக் காட்சியை”, என்று ஒரு பாடலைத் தந்துவிட்டு மறைந்தார். இவர் தீட்டிய காட்சியும், முன்புகண்ட “மடவ அம்ம” வகைதான்.
இங்கும் தலைவி முல்லைப் புதர்களின் அருகே வருத்தமுடன் தலைவன் வரவை நோக்கி அமர்ந்திருக்கிறாள். மழை வரப்போவதற்கு அறிகுறியாகப் பெருத்த இடியோசை அச்சம் தரும் வகையில் ஒலிக்கிறது. அருகேயமர்ந்துள்ள அவளது தோழி யாரையோ சாடிக் கொண்டிருக்கிறாள். அருகில் சென்று நன்றாகப் பார்த்தால் இங்கேயும் ஒரு மழை மேகம்தான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. பாவம். “மேகமே, உனக்கு எங்களைக் கண்டால் ஆகவில்லை. அதனால் வேண்டுமென்றே தவறான காலத்தில் பெரிதாக மழைபொழிந்து, பெருத்த இடியோசையால் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறாய். அதற்கு வேறு ஆளைப் பார்.” என்று மேகத்தைப் பழிக்கு முகமாகத் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். முதலில் பாடலைப் பார்ப்போம்.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறிவரி நல் மான் புகர்முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர் மன்” இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக்கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே.

தோழி சொல்கிறாள். “எங்கள் தலைவர் வேலை நிமித்தமாக எம்மைப் பிரிந்து செல்லும் போது, “நீர் எப்பொழுது வருவீர்” எனக் கேட்டோம்.

அதற்கு அவர் “வண் பெயல் கார் வருபருவம் என்றனர்”. மிக்க மழையுடைய கார்ப்பருவமன்றோ நாம் வரும் பருவம்” என்று கூறிப் பிரியா விடை பெற்றுப் போனார்.

கார்ப்பருவத்திற்கு அடையாளம் என்ன? மழை பெய்யும். முல்லை பூக்கும். சென்ற வாரமும் ‘மலரின் மெளவல்’ ‘முல்லைச் செடி உன் பற்களைப் போல அரும்பும்போது’ என்று தலைவன் தலைவியின் தலையில் பனி மழை பெய்தது நினைவிருக்கும்…. இங்கும் முல்லைதான் கார்காலத்திற்குக் குறிப்புக் காட்டுகிறது.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
சிறிய பூவையுடைய முல்லையின் தேன் மணம் கமழும் பசிய மலரெல்லாம்,
பொறி வரி நன்மான் புகர் முகம் கடுப்ப

நன்மான் என்றால் இங்கே யானையைக் குறிக்கும். யானைக்குப் பல பெயர்கள் உண்டு. யானை, மாதங்கம், கரி, கைமா, வேழம், பகடு, களிறு, நன்மான் ஆகியவை இவற்றுள் சில. நல்ல யானையின் முகத்தில் வெண்புள்ளிகளும், வரிகளும் அமைந்திருக்கும். அப்படியாகத் தோன்றுமாறு முல்லைப் புதரிலே மலர்கள் பூத்திருக்கும். புகர் என்றால் மத்தகப் புள்ளி.
தண்புதல் அணி பெற மலர…. இந்த மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பெறும்படி மலர என்றான் தலைவன். அந்த முல்லை மலர்தற்கு உவமை வேறு காட்டினான்.
சரி, இப்போது என்னவானது? தலைவன் இன்னும் வரவில்லை. சென்ற வேலை முடியவில்லை. அவன் குறித்த கார் காலமும் வரவில்லை. ஆனால், இந்த மேகம் இருக்கிறதே..அது என்ன செய்ததாம்?

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
பேர் அஞர் உள்ளம் என்றால் பெரிய துன்பம் பொருந்திய உள்ளம். தலைவனைப் பிரிந்தமையால வாடி நைந்த உள்ளம். அப்படியான சோர்ந்த உள்ளம் படைத்த தலைவி நடுங்குவதைக் நீ காண விரும்பினை. அதில் உனக்கு ஒரு அல்ப மகிழ்ச்சி. எதனால்?

அன்பு இன்மையின்
உனக்கு தலைவி மேல் அன்பில்லாததனால் அவளை நடுங்கி கலங்க வைக்கப் பார்க்கிறாய். அதனால் என்ன செய்தாய்?

பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர்குரல்
நீ பண்பில்லாத, இயல்பில்லாத காரியத்தைச் செய்தாய்.
பொய்யாக இடி இடித்து பெரிய ஓசை எழுப்பினாய் மழை வருமாற் போல இடி இடித்தாய். சரி இடித்துக் கொள் சத்தம் போடு. எங்களை யென்னவென்று நினைத்தாய்? இந்த பருவந்தவறிய இடியோசையை

“வாய் செத்து ஆலும் இன் மயில் மடக்கணம் போல” வாய் செத்து ஆலும் என்றால் வாய் செத்துப் போச்சுடா என்பார்களே …. அந்த மாதிரிப் பொருளல்ல. வாய் என்றால் வாய்மையென்று பொருள்; செத்து: கருதி; ஆலும்: கூவும் இல்லது அகவும். இடியோசை கேட்டு மயிலினங்கள் அகவும். இங்கே இந்த மடமையான மயிற் கூட்டம் இந்த இடியோசையைக் கேட்டு மழை வருமென தவறாகக் கருதி அகவும், ஆரவாரம் செய்தன. ஆனல் நாங்கள் உண்மை தெரிந்தவர்கள்.

நினை மருள்வேனோ
நாங்கள் பயந்து விடுவோமா? பயந்துவிடுவதென்றால் இடியோசையைக் கேட்டு பயந்து கொள்வதல்ல. தலைவன் கார்காலம் வருமுன்னே வருவேன் என்றாரே. இப்போது இடி இடித்து மழை வரவிருக்கிறதே. அவர் இன்னும் வரவில்லையே. அவருக்கு என்னவானதோ ஏதானதோ வென்று பயந்து கொள்வோமென்று நினைத்தாயானால் அது நடக்காது. ஏனெனில் எங்களுக்கு எம்தலைவர் மீதும் அவரது வாக்கின் மீதும் மிகுந்த நம்பிக்கையிருக்கிறது.

வாழியர் மழையே : மழையே நீ நல்லாயிரு. இது இகழ்ச்சியாகக் கூறப்பட்ட வாழ்த்து இப்படி ஒரு பண்பில்லாத காரியத்தைச் செய்கிறாயே. பொய்யாக இடித்து, மழைபெய்கிறாயே… நீ நல்லாயிரு. நீ உருப்படுவாயா?

உண்மையில் நடந்ததென்னவெனில் பருவந்தவறி இடியோசையுடன் மழை பெய்தது. இடியோசை கேட்டு மயில்கள் ஆரவாரம் செய்தன. தோழி தலைவியிடம் “இது உண்மையில் கார் காலமல்ல, இது பருவந்தவறிய மழை. நின் தலைவர் கார் காலத்தில் வருவார். இந்த மேகம்தான் உன்னிடம் அன்பில்லாமல் வம்பு செய்கிறது” என்று தேற்றுகிறாள். இந்த மிக்க நயமான காட்சியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர் முகம் கடுப்ப
தண்புகலணி பெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர்மன்னினிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பின்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்தாலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள்வேனோ வாழியர் மழையே.

நற்றிணை: 248
காசிபன் கீரனார்
திணை: முல்லை
துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.