இனிய அல்ல நின் இடி நவில் குரலே!
நற்றிணை : 238
தீட்டியவர்: கந்தரத்தனார்
இந்தக் காட்சியிலும் அனுதாபத்திற்குகந்த மேகம் குற்றவாளியாக நிற்கிறது! இங்கேயும் வழக்கமான பல்லவிதான். தலைவன் பொருள் தேடச் சென்றான் செல்லும் போது மழைப் பருவத்திற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்றான். மழைவருவதற்கு அறிகுறியாக இடி இடித்தது. தலைவியின் மனதில் இடி இறங்கியது. கவலைப்பட ஆரம்பித்தாள். அவளைத் தேற்று முகமாக தோழி வழக்கம் போல, எல்லா சங்க காலத்துப் பெண்களைப் போல மேகத்தைப் பழித்தாள். என்ன சொல்கிறாள். வாருங்கள் வந்து கேளுங்கள்..
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
“அவர் நிலை அறியுமோ ஈங்கு”என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே
வறம் கொல வீந்த கானத்து: வறட்சியாலே, கொடிய கோடை வறட்சியாலே பட்டுப்போன காட்டிலே..
வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம். பிடவம் என்றால் புதர் செடி. வண்டுகள் வாய்திறந்து தேனுண்ணுமாறு பிடவ மலர்கள் மலரும். இதை இப்படியும் கொள்ளலாம் -வண்டுகள் தம் வாய் திறந்து அதாவது இதழிகளை விரித்து வண்டுகள் தேனுண்ணுமாறு மலரும். அந்தப் பிடவமலர்கள் எப்படியிருக்கின்றன. சிறிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய ஆயர்மகளிர் கூடும் கூட்டம் போல இருக்கிறதாம்
குறும் பூங் கோதை மகளிர்.. பூங்கோதை யென்றால் பூக்களையுடைய கூந்தலுள்ளவள்.
குழூஉ நிரை கடுப்ப… கூடும் கூட்டம் போல …. அந்தப் பிடவ மலர்கள் பூத்துள்ளன. பிடவமலர்கள் இலைகளை உதிர்த்து தூர் தெரியாதபடி பூத்தலால்… கானகத்தை பூச்சூடிய மகளிராக உவமை சொல்லப்பட்டது. மாலை அந்தி.. அப்படிப்பட்ட மாலைப் பொழுதிலே
மால் அதர் நண்ணிய: நான் காம நோய் மிகக் கொள்ளுமாறு
பருவம் செய்த கருவி மாமழை! கார்ப் பருவத்தை தோற்றுவித்த மேகமே… கார்ப்பருவம் இன்னும் வரவில்லை… ஆனால் வரவைத்தது இந்த மேகமாம்.. இது மேகத்தின் தவறு.. இந்த மேகம் வேறென்ன செய்தது? தலைவனை அழைத்தல்லவா வந்திருக்கவேண்டும். அப்படியிராமல் தனியாக வந்து நிற்கிறது.
அவர் நிலை அறியுமோ ஈங்கென வருதல்.. “அவரது நிலையை அறிவாயோ என்பதுபோல” தனியாக வருகிறது இந்த மேகம். இன்னொரு பொருள். அவர் நிலை ஈங்கு அறி என வருதல்: “அவர் நிலைமையை நான் கூற இங்கு அறிந்து கொள். அவர் இன்னும் வரவில்லை என்பதுபோல வருதல்.
சான்றோர்ப் புரைவதோ அன்று… நல்லவர்கள் செயலை ஒத்ததாகாது… “பிறர் நோயையும் தன் நோய்போல் போற்றி அறனறிதல் சான்றோர்கட் கெல்லாம் கடன்” என்று கலித் தொகையில் சொல்லியிருக்கிறது (139). இந்த மேகம் தன்னுடன் தலைவனை அழைத்து வந்திருந்தால் தலைவியின் நோய் தீர்ந்திருக்கும். அப்படி வராமல், தனியாக வந்து கேட்டது போல் இருப்பது சான்றோர்களின் செயலன்று. அதுமட்டுமா?
உடன் மான்று உரவு உரும் உரனும் நீரின்: ஒரு சேர மனங்க நின் இடித்து முழங்கும் தொழிலையுடைய குரல், வலிய இடியாய், நின் இடிநவில் குரல் முழங்கும் தன்மையாலே உன் குரல் வலிய இடியேறாக முழங்கும்…. அது என்ன செய்கிறது?
பரந்த பாம்பு மழுங்கல் அன்றியும் :எங்கும் பரவிய பாம்புகள் அஞ்சி, இடியேறுண்ட நாகம் போல என்பார்கள், அப்படி பயந்து தம் பரந்த பையை, படத்தை அச்சத்தினால் சுருக்கும். அப்படி உன்செயல் பாம்புகளை வலியடங்கச் செய்வதன்றி.
மாண்ட கனியா நெஞ்சத்தானும்.. பெருமை பொருந்திய என் தலைவனின் மனதைக் கனியச் செய்யவில்லை…
அதனால், நின் இடி நவில் குரல் இனிய அல்ல.. நின் குரல் எனக்கு இனிமையைச் செய்யவில்லை. தலைவன் வரவில்லையே என்ற நடுக்கத்தைத் தரவில்லை. ஏனெனில் அவர் நிச்சயமாகக் குறித்த காலத்தில் வந்துவிடுவார். எங்களைப் பயமுறுத்த நினைக்காதே. போய்விடு. என்று இந்தத் தோழி மேகத்தைப் பழிக்கும் விதமாகத் தலைவியைச் சமாதானப் படுத்துகிறாள்.
“சொன்ன காலத்தில் இன்னும் வராமையால் தலைவனின் நெஞ்சம் நஞ்சுடைப்பாம்பினும் கொடியது, கொஞ்சமும் கனிவிலாதது” என்றும் குறிப்பாகத் தலைவனை நொந்துகொள்கிறாள்.
இந்தப் பாடலை மறுபடியும் படியுங்கள்.
வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே
நற்றிணை : 238
கந்தரத்தனார்
திணை : முல்லை
துறை: தலைமகள் பருவங் கண்டு அழிந்தது