Tag Archives: natrinai

அடடா! என்ன நல்ல மேகம்!

அடடா! என்ன நல்ல மேகம்!
காட்சி : 112
தீட்டியவர்: பெருங்குன்றூர் கிழார்

தலைவியைச் சமாதானம் செய்வதற்காக மேகத்தைப் பழிக்கும் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க,” என்னடாயிது, இந்த சங்க காலத்துப் பெண்களுக்கு வேறு வேலையே யில்லையா? காதலன் வெளியூர் போனவன் வருவானெனக் காத்து நிற்க வேண்டியது. மழைக் காலம் வந்தால் இன்னும் வரவில்லையேயென்று கவலைப் படவேண்டியது. இதுதான் தலைவியின் வேலை. அவளது தோழிப் பெண்ணுக்கும் அவளைத் தேற்றுவது தவிர வேறு வேலையில்லை போலும். ஏதாவது சமாதானம் சொல்லி தேற்றிக் கொண்டேயிருப்பது.” என்றெல்லாம் தோன்றியது. “இந்த சங்ககாலப் பெண்களிடம் மேகம் படும் பாடு பெரிய பாடுதான். இக்காலத்தில் தமிழ் நாட்டில் எல்லோரும் மழை வரவேண்டுமென்று மாரியை வேண்டி நின்றால், அக்காலத்தில் மாரியை வம்ப மாரியென்று திட்டுவதே வழக்கமாகிப் போனது. இப்படி சங்க காலத்து பெண்கள் மழையைத் திட்டித் திட்டித் தான் கோபம் கொண்ட மேகம் தமிழ் நாட்டில் அவ்வப்போது பிகு பண்ணுகின்றது போலும்” என்று எண்ணியவாறு நற்றிணைக் காலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு காட்சி! ஆ! யாரோ ஒருத்தி மழை மேகத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தாள்!!

இந்தக் காட்சியிலும் அதே மழைக்காலம், பருவம் வந்துவிடுமுன் வருவேன் என்று சொல்லி சென்று விட்டு இன்னும் வராத தலைவன். தோழி சொல்கிறாள்:

விருந்தெவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து, விரும்பி,
மாக்கடல் முகந்து, மணிநிறத்தருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப்பாய்
மலையிமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

இந்தப் பெண்கள் இருக்குமிடம் மலைப்பகுதி. மரங்களும் நீர் வீழ்சிகளும் அடர்ந்த இடம். அது எப்படியான மலைப் பக்கம் தெரியுமா?
சுரும்பு இமிர் அடுக்கம். சுரும்பு என்றால் வண்டினம். வண்டினம் முரலும் மலைப்பகுதி. வண்டுகள் மலரிருக்கும் இடம் தேடிவருமல்லவா? இங்கேயும்,
சாரல் அரும்பு அறமலர்ந்த
கருங்கால் வேங்கை சுரும்பு இமிர் அடுக்கம்…
மலைச்சாரல் முழுதும் அரும்புகள் மலர்ந்த, கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், வண்டினம் முரலும் மலைப்பக்கம். அப்படிப்பட்ட மலைப்பக்கத்தின் பெருமை என்ன?
அடுக்கம் புலம்ப, அந்த மலைப்பகுதியே அஞ்சும்படியாகக் களிறு அட்டு; களிறு என்றால் யானை. யானைக்குக் களிறு, பிடி, வேழம், கரிமா, கோட்டுமா, நன்மான், பகடு, மாதங்கம் என்றெல்லாம் பல பெயர்களுள்ளன. இங்கே களிறு என்பதை காட்டு யானையென்றும் கொள்ளலாம். அப்படியான களிற்றைக் கொன்று, அட்டு,
உரும்பில் உள்ளத்து அரிமா விளங்கும்: உரும்பில், என்பதை உருப்பு இல் என்று கொள்ள வேண்டும். உருப்பு என்றால் அச்சம். தமிழ் பாடல்களில் எதுகை, மோனை இவை மிகவும் இன்றியமையாததல்லவா? அதனால் உருப்பு என்பது உரும்பு என்று திரிந்தது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் முந்தைய வரி ‘சுரும்பு இமிர்’ என்று ஆரம்பிக்கிறது. சுரும்பும், உரும்பும் எதுகையாக அமைந்தது என்பார்கள். சரி, இங்கே களிற்றைக் கொன்று, அச்சமில்லாத உள்ளத்தோடு … என்பதிலிருந்து இந்தப் போராட்டம் அந்த மலைப்பகுதியையே நடுங்க வைக்கிறதாம். அப்படிப்பட்ட வீரமான நிகழ்ச்சிகள் நடக்கும் மலைக்கு உரியவன் நம் தலைவன்.
பெருங்கல் நாடன்… நாட்டுக் குடையவன் நாடன். பட்டிக்காட்டிலிருந்து வந்தவனை காடன் என்று சொல்லப் போய், அது காட்டானாக மாறி வழங்குவது நமக்குத் தெரியும். வீரமான சிங்கத்தைப் பற்றி சொன்னதால் இவனும் அதுபோல் பெரும் போர்வீரனாக விளங்குகிறான் என்றும் குறிப்பதாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.
சரி, தலைவனைப் பற்றி சொல்லியாயிற்று, இந்த மழை மேகம் என்ன செய்கிறது? இது ரொம்ப நல்ல மேகம். நற்றிணையில் வந்த மற்ற மேகங்களைப் போலல்ல. “சான்றோர் புரைவது அன்று” என்று திட்டு வாங்கிய மேகமல்ல. பிறர் நோயையும் தன்னோய் போலப் போற்றி அறனறியும் மேகம். இது இந்தத் தலைவனின் வரவை எப்படியோ அறிந்து கொண்டு விட்டதாம். அதாவது, மேகம் உயரத்திலிருந்து பார்த்து விட்டது போலும். உடனே, மகிழ்ச்சியினால், “தலைவன் வருவேன் என்றபடி வாக்குத் தவறாமல் வருகிறான்” என்று மகிழ்ந்தது. நாமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தால் தலைகால் தெரியாமல் ஆடுவோமில்லையா? இந்த மேகம் மகிழ்ந்தால் என்னதான் செய்யும்?
மாக்கடல் முகந்து.. ஓடிப்போய் பெரிய கடலிலுள்ள நீரை உண்டு,
செறிந்தது: இங்கே வந்து மழையாகப் பெய்து தள்ளிவிட்டது. எப்படியென்றால்,
மணிநிறத்து அருவித் தாழ் நீர் நனந்தலை அமுந்து படப்பாய். மணிபோலும் வெண்மையான நிறம் கொண்ட அருவி தாழ்நீர்.. அருவி விழுகின்ற இடமெல்லாம் மளைபடுமாறு, அப்படியே அருவியையே மொத்தமாக மறைத்து, அமுந்து.. மழை அருவி நீரில் அமுந்துமாறு.. அவ்வளவு வேகமாகப் பெய்கிறது.. இன்னும்,
மலை இமைப்பது போல் மின்னி… மின்னலாக மின்னுகிறது. அதைப் பார்க்கையில் அந்த மலையே கண்ணை இமைப்பது போல இருக்கிறதாம்.
சிலை வல் ஏற்றொரு செரிந்த,
சிலையென்றால் ஒலி. ஏறு என்பது இடியைக் குறிக்கும். இப்படியாகத் தலைவர் வரும் சேதியை மிகவும் ஆரவாரமாகத் தெரிவிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால் ஜோவென்று கொட்டித் தள்ளி விட்டது!
மழை பொழிந்தது நமக்குத் தலைவனின் வருகையை அறிவிக்க வேண்டியிருக்கலாம். பெரும் மழையாகப் பெய்தமை, தன் அளவிலா மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக்வும் இருக்கலாம். அல்லது, அப்பாடா இனி நம்மை இந்தப் பெண்கள் திட்ட மாட்டார்கள் என்ற மகிழ்ச்சியாலுமிருக்கலாம்!!!
இம்மழைக்கே விருந்து எவன் செய்கோ தோழி! தோழி இப்படித் தலைவன் வரவை முன்பே நமக்கு அறிவிக்கின்ற இம்மழைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று தோழி சொல்கிறாள்:
விருந்து எவன் செய்கோ என்றால் எவன் விருந்து போடுவான் என்பதல்ல. விருந்து என்பது இங்கே முகமன், கைம்மாறு, நன்றியெனப் பொருள்படும். எவன் செய்கோ.. என்ன செய்யக் கூடும்! வள்ளுவர் சொன்னார்
‘தினைத்துனை நன்றி செய்யினும் பனைத்துணையாகக் கொள்வர் பயந்தெரிவார். ‘
இந்தப் பெண் அப்படிப் பயன் தெரிந்த பெண் போலிருக்கிறது.

இப்படி இந்த பெண் மேகத்தைப் பாராட்டுவது போல் தலைவியைத் தேற்றுகிறாள். “இதோ மழை வந்துவிட்டது. உன் தலைவன் வருவதை அறிந்து உனக்குச் சொல்லும் முகமாகவே இந்தமழை வந்திருக்கிறது. அதனால் கவலையுறாதே.. விரைவில் வந்து விடுவான்” என்று குறிப்பால் தேற்றுகிறாள். “பகுத்தறிவில்லாத மேகம் கூட உன் தலைவன் வருவதை அறிந்து மகிழ்கிறது. ஆறறிஉடைய நீதான் வரவில்லை என்று வருத்தப்படுகிறாய்” என்று சொல்வதாகவும் உரைப்பார்கள்.

அப்பாடா, கடைசியாக மேகத்தின் உள்ளம் குளிர்ந்திருக்கும்!!!! ! மழைக்காலக் காட்சியை எப்படியெல்லாம் விளக்குகிறார்கள்? பார்த்தீர்களா? முன்பு, ‘மடவது அம்ம மணிநிற எழிலி’ என்ற பாடலில் ஒருத்தி “ இந்த மேகம் பருவம் தவறி, அவசரமாக கடல் நீரையுண்டு, பொறுக்காமல், மலைப்பக்கத்தில் நின்று, மழையாகப் பெய்து விட்டது! இது அறியாத மேகம், உன் தலைவன் வரவில்லை எனக் கவலைப்படாதே” என்று சொன்னாள். (இளந்திரையனார் இதை எழுதி வைத்தார்). இங்கேயோ, மற்றொருத்தி, “இந்த நல்ல மேகம் உன் தலைவன் வரவை அறிந்து மகிழ்வோடு, கடல் நீரைக் குடித்து, மின்னி இடியுடன் பெய்து உனக்கு செய்தி சொல்லி விட்டது.“என்று சொல்கிறாள். இப்பாடல்களை மீண்டும் மீண்டும் ஒப்பு நோக்கி மகிழுங்கள்.

இப்போது இந்தப் பாடலை மறுபடி படியுங்கள்:

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந்தலை அழுந்து படப் பாய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

நற்றிணை: 112
பாடியவர்: பெருங் குன்றூர்க்கிழார்
திணை: குறிஞ்சி
துறை: பருவ வரவின் கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

அருஞ்சொற்பொருள்.இமிர் – ஒலிக்கும். அடுக்கம் – மலைப் பக்கம். உருப்பு – அச்சம். அரிமா – சிங்கம். நனந்தலை – அகன்ற இடம். ஏறு – இடி. விருந்து – கைம்மாறு

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!
நற்றிணை : 238
தீட்டியவர்: கந்தரத்தனார்

இந்தக் காட்சியிலும் அனுதாபத்திற்குகந்த மேகம் குற்றவாளியாக நிற்கிறது! இங்கேயும் வழக்கமான பல்லவிதான். தலைவன் பொருள் தேடச் சென்றான் செல்லும் போது மழைப் பருவத்திற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்றான். மழைவருவதற்கு அறிகுறியாக இடி இடித்தது. தலைவியின் மனதில் இடி இறங்கியது. கவலைப்பட ஆரம்பித்தாள். அவளைத் தேற்று முகமாக தோழி வழக்கம் போல, எல்லா சங்க காலத்துப் பெண்களைப் போல மேகத்தைப் பழித்தாள். என்ன சொல்கிறாள். வாருங்கள் வந்து கேளுங்கள்..

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
“அவர் நிலை அறியுமோ ஈங்கு”என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே

வறம் கொல வீந்த கானத்து: வறட்சியாலே, கொடிய கோடை வறட்சியாலே பட்டுப்போன காட்டிலே..
வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம். பிடவம் என்றால் புதர் செடி. வண்டுகள் வாய்திறந்து தேனுண்ணுமாறு பிடவ மலர்கள் மலரும். இதை இப்படியும் கொள்ளலாம் -வண்டுகள் தம் வாய் திறந்து அதாவது இதழிகளை விரித்து வண்டுகள் தேனுண்ணுமாறு மலரும். அந்தப் பிடவமலர்கள் எப்படியிருக்கின்றன. சிறிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய ஆயர்மகளிர் கூடும் கூட்டம் போல இருக்கிறதாம்
குறும் பூங் கோதை மகளிர்.. பூங்கோதை யென்றால் பூக்களையுடைய கூந்தலுள்ளவள்.
குழூஉ நிரை கடுப்ப… கூடும் கூட்டம் போல …. அந்தப் பிடவ மலர்கள் பூத்துள்ளன. பிடவமலர்கள் இலைகளை உதிர்த்து தூர் தெரியாதபடி பூத்தலால்… கானகத்தை பூச்சூடிய மகளிராக உவமை சொல்லப்பட்டது. மாலை அந்தி.. அப்படிப்பட்ட மாலைப் பொழுதிலே
மால் அதர் நண்ணிய: நான் காம நோய் மிகக் கொள்ளுமாறு
பருவம் செய்த கருவி மாமழை! கார்ப் பருவத்தை தோற்றுவித்த மேகமே… கார்ப்பருவம் இன்னும் வரவில்லை… ஆனால் வரவைத்தது இந்த மேகமாம்.. இது மேகத்தின் தவறு.. இந்த மேகம் வேறென்ன செய்தது? தலைவனை அழைத்தல்லவா வந்திருக்கவேண்டும். அப்படியிராமல் தனியாக வந்து நிற்கிறது.
அவர் நிலை அறியுமோ ஈங்கென வருதல்.. “அவரது நிலையை அறிவாயோ என்பதுபோல” தனியாக வருகிறது இந்த மேகம். இன்னொரு பொருள். அவர் நிலை ஈங்கு அறி என வருதல்: “அவர் நிலைமையை நான் கூற இங்கு அறிந்து கொள். அவர் இன்னும் வரவில்லை என்பதுபோல வருதல்.
சான்றோர்ப் புரைவதோ அன்று… நல்லவர்கள் செயலை ஒத்ததாகாது… “பிறர் நோயையும் தன் நோய்போல் போற்றி அறனறிதல் சான்றோர்கட் கெல்லாம் கடன்” என்று கலித் தொகையில் சொல்லியிருக்கிறது (139). இந்த மேகம் தன்னுடன் தலைவனை அழைத்து வந்திருந்தால் தலைவியின் நோய் தீர்ந்திருக்கும். அப்படி வராமல், தனியாக வந்து கேட்டது போல் இருப்பது சான்றோர்களின் செயலன்று. அதுமட்டுமா?
உடன் மான்று உரவு உரும் உரனும் நீரின்: ஒரு சேர மனங்க நின் இடித்து முழங்கும் தொழிலையுடைய குரல், வலிய இடியாய், நின் இடிநவில் குரல் முழங்கும் தன்மையாலே உன் குரல் வலிய இடியேறாக முழங்கும்…. அது என்ன செய்கிறது?
பரந்த பாம்பு மழுங்கல் அன்றியும் :எங்கும் பரவிய பாம்புகள் அஞ்சி, இடியேறுண்ட நாகம் போல என்பார்கள், அப்படி பயந்து தம் பரந்த பையை, படத்தை அச்சத்தினால் சுருக்கும். அப்படி உன்செயல் பாம்புகளை வலியடங்கச் செய்வதன்றி.
மாண்ட கனியா நெஞ்சத்தானும்.. பெருமை பொருந்திய என் தலைவனின் மனதைக் கனியச் செய்யவில்லை…
அதனால், நின் இடி நவில் குரல் இனிய அல்ல.. நின் குரல் எனக்கு இனிமையைச் செய்யவில்லை. தலைவன் வரவில்லையே என்ற நடுக்கத்தைத் தரவில்லை. ஏனெனில் அவர் நிச்சயமாகக் குறித்த காலத்தில் வந்துவிடுவார். எங்களைப் பயமுறுத்த நினைக்காதே. போய்விடு. என்று இந்தத் தோழி மேகத்தைப் பழிக்கும் விதமாகத் தலைவியைச் சமாதானப் படுத்துகிறாள்.
“சொன்ன காலத்தில் இன்னும் வராமையால் தலைவனின் நெஞ்சம் நஞ்சுடைப்பாம்பினும் கொடியது, கொஞ்சமும் கனிவிலாதது” என்றும் குறிப்பாகத் தலைவனை நொந்துகொள்கிறாள்.
இந்தப் பாடலை மறுபடியும் படியுங்கள்.

வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே
நற்றிணை : 238
கந்தரத்தனார்
திணை : முல்லை
துறை: தலைமகள் பருவங் கண்டு அழிந்தது

சங்க காலம்

சங்க காலம்
சங்க இலக்கியங்களிலே, எட்டுத்தொகைத் தொகுப்பிலே முதலாகச் சொல்லப்பட்ட நற்றிணை என்ற தொகுப்பிலிருந்து சில சுவையான காட்சிகளைக் கண்டு ரசித்திருந்தேன். அதுவோ மழைக்காலம், மரங்களெல்லாம் பூத்துக் குலுங்கும் கோலம். இந்த மனதிற்கு மிகவும் இனிதான சூழலிலே, மாலைப்பொழுதினிலே பல அழகிய இளம் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தன்னுடைய கடமையைத் தவறாக அல்லது தவறாது செய்து வரும் மழை மேகத்தை அவரவர் கருத்துப்படியும், நோக்கப்படியும், பழித்தும், ஏசியும், தமது தலைவர்கள் இன்னும் வராத வருத்தத்தை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கத்திலே வயதான பெண்கள், அன்னைமார்கள் போலும், பலவிதமான பூசைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இங்கே என்னதான் நடக்கிறது என்று நான் யோசித்தபடி சங்க காலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு மலைப் பகுதியில் இரு பெண்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தனர். ஒருத்தி (தலைவி போலும்) மிகவும் வாட்டமாகவிருந்தாள். மற்றொருத்தியோ முகத்தில் நம்பிக்கையும், புத்துணர்வுமாக விளங்கி, எதோ சொல்லித் தலைவியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். அட! தலைவன் வந்து விட்டான் போலிருக்கிறது. அந்தச் செய்தியைத்தான் சொல்கிறாள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். உடனே அருகில் ஒரு குரல் கேட்டது.
“இல்லை. நடராசனாரே.. இந்த அழகிய பெண்கள் தம் தலைவன் இன்னும் வாராமையால் மனம் சோர்ந்து, பசலை கொண்டு வாடுகின்றார்கள். அவர்களை அவர்தம் அன்பான தோழியர் தேற்றிக் கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் இங்கு நீர் காண்கிறீர்”
யாரென்று திரும்பிப் பார்த்தால், அட அவர்தான் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் தலைசாய்த்து வணங்கும், வணங்க வேண்டிய, பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்கள். இவர்தான் நற்றிணைக்கு முதன் முதலாக உரை எழுதியவர்.
“ஐயா, நற்றமிழ் முழுதும் கற்றறிந்த பெருமானே. இந்தப் பெண்கள் அப்படி என்னதான் நொந்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “தம்பி, காட்சி ஒன்றானாலும், பல்வேறு சங்கப் புலவர்கள் அவரவர் கற்பனைக்கேற்பத் தெளிந்த பாடல்களாகப் பாடியுள்ளனர். இதோ இந்த நற்றிணை என்ற தொகுப்பைப் படித்துப்பார்” என்று கொடுத்தார்.
“தம்பி, இப்பாடல்களில் எதுகை மோனை யிரா; அணிகளும் உவமைகளும் கொட்டிக் கிடக்க மாட்டா. அனைத்துப் பாடல்களும் ஆசிரியப்பா வகையினாலே அமைந்தவை. ஆனால், உள்ளதை உள்ளபடி, தெளிவாகச், சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு இரசிக்கும் தன்மைத்தாக இருக்கும். நவில் தொறும் நூல் நயம் போலும் என்றாற்போல், அவற்றைப் படிக்கப் படிக்க, இப்பாடல்களைப் பற்றி நினைக்க நினைக்க நீயே அவைகளின் அருமையை உணர்வாய் “ என்றார் பின்னத்தூரார்.
நற்றிணை முதலான சங்கநூல்களையும் அவற்றிற்கு உரையும் எழுதிச் சங்கத்தமிழ் காத்த தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாத ஐயர், பின்னத்தூரார் என்று அன்புடன் அழைக்கப்படும் நாராயணசாமி ஐயரவர்கள், மற்றும் சங்க இலக்கியங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழறிஞர்களை மனதில் நினத்த வண்ணம், சங்க காலக் காட்சிகளை மேற்கொண்டு ரசிக்கத் தொடங்கினேன். நான் ரசித்த காட்சிகளை மற்ற தமிழன்பர்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசையினாலே, பல இணைய தளங்களிலும், வட்டங்களிலும் அளித்தவற்றை இங்கே தமிழறிஞர்கள் முன் பணிவுடனும் வணக்கத்துடனும் வைக்கின்றேன்.

மடவ அம்ம மலர்கள்!! நற்றிணைக் காட்சி: 99

மடவ அம்ம மலர்கள்!!
நற்றிணைக் காட்சி: 99
தீட்டியவர்: இளந்திரையனார்

வாடிய தலைவி, உற்சாகத்துடன் அவளைத் தேற்றும் தோழி, மழை, அரும்பியுள்ள முல்லை மலர்கள், இன்னும் வராத தலைவன் – இந்தக் காட்சியமைப்பு நாம் முன்பே பல பாடல்களில் பார்த்ததுதான். இங்கு தோழி சொல்லும் சமாதானம்தான் புதுமையானது.
முன்பு இந்த மேகம்தான் மடமையானது என்று சமாதானப்படுத்தினாள் ஒரு தோழி. இங்கே இன்னொரு தோழி மலர்கள் ஏன் மலர்ந்தன, அதில் மேகத்தின் பங்கு என்ன என்பதற்கு ஒரு அருமையான காரணம் கூறுகிறாள். முதலில் பாடலைப் படிப்போம்.

“நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?” என்றிசின் – மடந்தை! – மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.

தோழி சொல்கிறாள்.
மடந்தை! நம் தலைவர் மேற்கொண்டுள்ள பயணம் அவ்வளவு எளிதானதா.
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – தண்ணிதாகிய நீர்மை அதாவது ஈரப்பசை கொஞ்சங்கூட இல்லாததாகிய வறண்ட, சென்று கடக்க முடியாத, நீண்ட நெறியில்.
துகில் விரித்தன்ன வெயில்: வெள்ளை வெளேரென்று வெண்மையான ஆடையை விரித்தாற்போன்ற வெயில் அடிக்கிறது.
அவிர் உருப்பின் அஞ்சு வரப் பனிக்கும்: வெப்பமோ மிகவும் அதிகமாக இருக்கிறது. கொடிய வெப்பத்தோடு அந்த வெய்யில் காண்பவர் அஞ்சும்படியாக இருக்கும்.
வெஞ்சுரம் இறந்தோர்: அப்படியான கொடுமையான கானகத்தின் கண்ணே சென்ற நம் தலைவர். சுரம் என்றால் காடு. இறந்தோர் என்றால் சென்றவர். ஆக நம் தலைவர் சென்றிருப்பதோ எளிதான வழியல்ல. உன்பொருட்டு அவர் பொருள் தேட அத்துணைக் கடினமான பாதையில் சிறிதும் அஞ்சாமல் சென்றிருக்கிறார்.
தாம் வரத் தெளித்த பருவம் காண் வர இதுவோ என்றிசின்
முன்பொரு பாடலில் தலைவன் குறிப்பாக ஒரு முல்லைச் செடியைக் காட்டி, இம்முல்லையரும்பும்போது நான் வந்துவிடுவேனென்று சொன்னதாகப் படித்தோம். இங்கே தலைவன் தான் வருவதாகக் கார்காலத்தை, மழைக் காலத்தைச் சுட்டிக் காட்டியிருந்தான். இப்பொழுது மழை பெய்திருக்கிறது. மலர்கள் மலர்ந்து கார் காலத்திற்குக் கட்டியங் கூறுகின்றன. அதனால் நீ மிகவும் கவலையுறுகிறாய்.
தலைவியே, அதனால் “நம் தலைவர் வருவதாகச் சொன்ன காலம் இதுதானா என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள்.
தலைவர் வருவதாகச் சொன்ன பருவம் இதுவல்ல. பின் ஏன் மழை பெய்கிறது, மலர்கள் மலர்கின்றன என்றெல்லாம் கேட்கிறாயா?”
“ முதலில் இந்த மேகம் ஒரு தவறு செய்தது. பருவகாலம் இன்னும் வரவில்லையென்பதை மறந்து அறியாமல் அளவுக்கு மீறி கடல் நீரைக் குடித்து விட்டது. நிறையத் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும். அதன் மடி நிறைந்து விட்டது!!”
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை. கமம் என்றால் நிறைந்து விட்ட என்று பொருள். மடி நிறைந்தால் என்ன செய்யும் பாவம்?
பொறுத்தல் செல்லாது: கொஞ்சங்கூடப் பொறுக்க முடியாமல்
இறுத்த வண் பெயல்: அவசரமாகப் பெய்து தள்ளிவிட்டது பெரு மழையாக! அதைப் பார்த்த மலர்ச் செடிகள் என்ன செய்தன? அவற்றிற்காவது இது கார் காலமில்லை. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிய வேண்டாமோ?
கார் என்று அயர்ந்த உள்ளமொடு: இது மழைப் பருவம் என்று மயங்கிய உள்ளமொடு, கார்காலமென்று நினைத்துக் கொண்டு,
தேர்வு இல பிடவமும், கொன்றையும், கோடலும் – ஆராயதனவாய், “இது ஒரு வேளை காலம் தவறிய மழையோ? அதாவது வம்ப மாரியோ?” என்றெல்லாம் யோசனை செய்யாது புதர்ச் செடிகளும், கொன்றையும், காந்தளும் பூத்தன. முதலில் முல்லைப் புதர் மலர்ந்தது. அதைப் பார்த்து அவசரமாக கொன்றையும், காந்தளும் “ ஓகோ, மழைக்காலம் வந்து விட்டதோ” வென்று மலரவும்,
மடவ ஆதலின் மலர்ந்தன பலவே – அறிவற்றனவாதலின் அப்பக்கத்திலுள்ள மற்ற மலர்களும் மலர்ந்து நின்றன. அவை அஃறிணைப் பொருட்களாகையால் அறியாமையால் மிகுதியாகப் பூத்து விட்டன.
“அவற்றைக் கண்டு நீ கார் காலமென்று மனம் மயங்காதே. இது கார்காலம் போலத் தோன்றினாலும் இது நம் தலைவர் கூறிய பருவமன்று. அவர் சென்ற வழி வெய்யில் மிக்கது என்றாலும், கார்ப் பருவம் வருவதை அவர் அறிவார். இது வம்ப மாரி ( பருவம் தவறிய மழை) காரல்ல. அவர் பொய்யுரைக்க மாட்டார். குறித்த பருவத்தில் வந்துவிடுவார். கவலைப் படாதே.” என்று தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கார்காலம் வந்துவிட்டது. வருவதாகச் சொன்ன தலைவன்தான் இன்னும் வரவில்லை. வேறு வழியொன்றும் தோன்றாமையால் எப்படியாவது தலைவியைச் சமாதானப்படுத்துவதற்காக இப்படி ஒரு கற்பனையான விளக்கத்தைத் தருகிறாள் இத்தோழி!

நீர் அற வறந்த நிரம்பா நீளிடைத்
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தான்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் – மடந்தை! மதி இன்று
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமுங் கொன்றையுங்கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.
நற்றிணை: 99
பாடியவர்: இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை: பருவங்கண்டாற்றாளாகிய தலைவியைத் தோழி பருவமன்றென்று மறுத்தது.

குறுந்தொகையிலும், இப்படித்தான் ஒரு தோழி இது வம்ப மாரி, பருவம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை, கார் காலமல்ல. கொன்றை மலர் அறியாமையால் பருவம் தவறிப் பூத்து விட்டது என்று தேற்றுகிறாள் !
மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை
கல் பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெறி தரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே ( குறுந்தொகை 66)